dgfகனடாவின் டொரன்டோவில் வசிக்கும் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, சித்திரவதை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில், நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு இலங்கைக்கு தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ரோய் சமாதானம் (46) என்பவர், 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் நாட்டுக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், சிங்கப்பூரில் இருந்து நண்பரால் வர்த்தகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 600 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரால் கப்பம் கேட்கப்பட்ட நிலையில் அதனை கொடுக்க மறுத்தமையினால், “கனேடிய புலி” என்று அடையாளப்படுத்தப்பட்டு ரோய் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கைப் படையினராலேயே தான் சித்திரவதைகளுக்கு உட்பட்டதாக மூன்று வருடங்களுக்கு முன்னரே கனடாவில் முறைப்பாடு மூலமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் ரோய் தெரிவித்திருந்தார் என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, ஜெனீவா குழுவின் தீர்ப்பை இலங்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிக்கான கனேடிய நிலையத்தின் சட்டத்துறை பணிப்பாளர் மெட் இசென்பிராட் கோரிக்கை விடுத்துள்ளார்.