jaf.university (2)யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நள்ளிரவில், சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளை பல்கலைக்கழக வளாகத்துள் வைத்து மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது, ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், ‘இவ்வாறான கொண்டாட்டங்கள் எவையும் இங்கு இடம்பெறக்கூடாது’ என தெரிவித்துள்ளனர். மாணவர்கள், ‘சக மாணவனுடைய பிறந்தநாளையே கொண்டாடினோம்’ என தெரிவித்ததுடன், ‘பல்கலைக்கழக வளாகத்தினுள் எவ்வாறு ஆயுதங்களுடன் உள்நுழைந்தீர்கள?;’ என கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பொலிஸார், ‘பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இங்கு வந்தோம் என தெரிவித்ததுடன், இவ்வாறு அநாவசிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சுட்டுவிடுவோம்’ என கொலை அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர் என கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் க.றஜீவன் தெரிவித்துள்ளார்.