karunaவிடுதலைப் புலிகள் இயக்த்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி ‘கர்னல்’ கருணா, எனப்படும், விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்தி்ருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர்.அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரனை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 9 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய நிதி மோசடிகளை ஆராயும் விசேட போலீஸ் குழு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அழைக்கப்பட்ட கருணா அம்மானிடம் போலீசார் வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.

பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட அவர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த போலீசார், விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாததன் காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர், அமைச்சு பதவி முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்த போதிலும், அந்த செயலகத்தின் அதிகாரிகள் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்று அறிவித்தார்.

கருணா தரப்பு கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரை வரும் 07-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்து 2004ம் ஆண்டு பிரிந்த கருணா, பின்னர் மஹிந்த அமைச்சரவையில், துணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2004ல் கருணா வி்டுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்த பின்னர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைப் படைகளால் தோற்கடிக்கப்பட வழிவகுத்தது.

கருணா லண்டனுக்கு 2007ம் ஆண்டு வந்த போது, அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.