யாழ். வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தின விழாவும் பாடசாலையில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ அருணாசல சாஸ்திரிகள் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ந.இரவீந்திரன் அவர்களது தலைமையில் நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. சந்திரராசா (வலயக் கல்விப்பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. சா.அருள்ஞானானந்தன் (கிராமசேவை அலுவலர், வடலியடைப்பு) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 150,000 ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று கண்ணாடி அலுமாரிகளும், நிழற்பிரதி இயந்திரம் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை இடம்பெற்று நினைவுப் பேருரையினை திரு. பா.முரளீதரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், ஆசியுரையினை திரு. இ.பிரதாபசர்மா (ஆசிரியர், யாழ். மகாஜன கல்லூரி, தெல்லிப்பழை) அவர்களும் நிகழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து அதிபர் அறிக்கையிடலும் உரையும் இடம்பெற்றது,
அதிபர் தனது உரையின்போது வட மாகாணசபை ஊடாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் வகுப்பறைகளை அமைப்பதற்கும், மேற்தளம் அமைப்பதற்குமான உதவிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து விருந்தினர்களின் உரை மற்றும் மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று மாணவ, மாணவியர்க்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
பாடசாலையின் வளர்ச்சியானது கிராமத்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நகரப் பாடசாலைகளில் கல்விகற்பதற்கு வெகுதூரம் அனுப்புவதால் வருகின்ற ஆபத்துகளை உணர வேண்டும். அங்கு பல பிள்ளைகளுக்கு மத்தியில் கல்வி கற்கவேண்டி ஏற்படுவதால் கற்றலில் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. அத்துடன் பெற்றோருடன் பிள்ளைகள் நீண்டநேரம் இல்லாத நிலைமையால் பல்வேறு பிரச்சினைகளும் எழுவதோடு, போக்குவரத்துப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஆனால், இப்பகுதி பெற்றோர் இந்தப் பாடசாலையிலே தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக அதிபர் கூறினார். இது மிகவும் வரவேற்கக்கூடிய விடயம். மிகப்பெரிய யுத்தத்திற்கு மத்தியில் மிகப்பெரிய அழிவுகளை சந்தித்தும் எங்கள் சமூகம் ஓரளவுக்கேனும் தலைநிமிர்ந்து வாழக்கூடிள நிலைமை இருப்பது அது கல்வியினால்தான் ஏற்பட்டது.
பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்தான் அவர்களின் தகுதியை கணிக்கின்றது. கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளை இந்தப் பாடசாலை மாணவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும். இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு சிறப்பாக இருப்பதைப் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது.
கிராமப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்துகொண்டு இருப்போம். ஒரு அரசியல்வாதியாக எங்களால் இயன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்வோம். இதன்மூலம் கல்வி வளர்ச்சி அடைவதற்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். ஆயினும் அதனை அடைவதற்கு பாடசாலை சமூகம்தான் முழுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது பேச்சினை நிறைவுசெய்கின்றேன். நன்றி வணக்கம்.