தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 68. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்” என்று தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22-ஆம் திகதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்துவைக்க பன்னீர்செல்வம் பதவியேற்று கொண்டுள்ளார்.
உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல்மீது படைவீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர். அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மக்கள் அஞ்சலி செலுத்திய பின் இன்றுமாலை 4.30மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் அவரது உடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.