thipaசசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-இன்றைய சூழ்நிலையில் நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன். இந்த விஷயத்தை பொறுத்த வரை ஜனநாயக ரீதியாக மக்கள் முன் விடுகிறேன். அவர்கள் முடிவு சொல்லட்டும்.

மக்களின் முடிவை கட்சி ஏற்க வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றார்போல்கட்சி எதிர்காலத்தை வகுத்து கொள்ள வேண்டும்.

சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை. அவர்களை அரசியலுக்கு அப்பால்தான் நிறுத்தி வைத்திருந்தார்.

நான் ஜெயலலிதாவை சார்ந்தவள். எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். இது சம்பந்தமாக பல முறை விவாதம் நடந்ததும் தெரியும். அத்தை ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு.

சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொள்ளும்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இந்த விஷயத்தில் கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஒரு மனக்கசப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்

 எனது அத்தை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் எங்கள் அத்தைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயங்கள் பெரும்பாலானவை கட்சி தொண்டர்களுக்கு தெரியாது.

சசிகலாவை தனது வாரிசாக எனது அத்தை ஜெயலலிதா அறிவிக்க நினைத்து இருந்தால் எப்போதோ அதை செய்து இருப்பார். ஏன் அதை செய்யவில்லை? இதுபற்றி அவர்கள் விளக்குவார்களா?

எனது அத்தையின் இறுதி சடங்குகள் முறையாக நடத்தப்படவில்லை. இது ஒரு சோகமான நிகழ்வு. உறவினர்களான எங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எங்களை கலந்து கொள்ளவும் அழைக்கவில்லை. எனது அத்தையின் இறுதி சடங்குகள், சம்பிரதாயங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.