warthaடும் புயலான வர்தாவின் தாக்கத்தால்,  சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு மரங்கள் வீழ்ந்தன.

இன்று திங்கள்கிழமை மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான ‘வர்தா’, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.wartha-jpg01wartha-02கடும் புயலின் எதிரொலியாக, பொது மக்கள் யாரும் மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த புயலின் மையப்பகுதி கரையை கடந்த போது, அதன் வேகம் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான ‘வர்தா’, இன்று திங்கள்கிழமை மாலை 3 முதல் 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென்னை துறைமுகத்தை கடந்ததாகவும், அது தற்போது தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயங்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

புயலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததாகவும், சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் பல மரங்கள் விழுந்ததாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதி தீவிர வர்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது. மேலும், அது வலு இழக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதலே, சென்னை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி இணைப்புகள், மற்றும் கைபேசிகள் ஆகியவை செயலிழந்துள்ளன.

சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
வர்தா புயலின் தாக்கம் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை முகமை கூறுகையில், மழை நின்று விட்டாலும், மரங்கள் பல பகுதிகளிலும் விழுந்துள்ளதால், பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படும் நடவடிக்கைகள் போர் காலா அடிப்படையில் நடந்து வருவதாகவும், பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென தமிழக பேரிடர் மேலாண்மை முகமை மேலும் தெரிவித்துள்ளது.

புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்
 
இதனிடையே, சென்னை , காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்பட்ட தாக்கம் குறித்து தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தமிழக முதலைமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 97 மையங்களில் 10, 432 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், வர்தா புயலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வலைத்தளங்களில் குவியும் புயல் குறித்த செய்தி

முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புயல் குறித்த செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் சமூக வலைத்தளமான டிவிட்டர் மூலம் உதவி செய்து வருகிறார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு ஏதேணும் அவசர உதவி தேவை என்றால் கட்சித் தொண்டர்களுடன் என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாக கூறி தன்னுடைய அலுவலக தொடர்பு எண்ணையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.