malayakamவெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்று, கணவனை பறிகொடுத்ததையும் அறியாது, உரிய முறையில் ஊதியமும் வழங்கப்படாது நிலையில் நாட்டுக்கு வந்த பெண்ணொருவர் பற்றி தெரியவந்துள்ளது.

20.08.2014 தனது வீட்டிலிருந்து சவூதி – ரியாத் மாநிலத்திற்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றார் மஸ்கெலியா – கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா.  , அவ் வீட்டின் முதலாளி ஏமாற்றியதன் காரணமாக இரு வருடங்களின் பின் உழைத்தமைக்கு ஊதியம் கிடையாது வெறுங்கையுடன் கடந்த 8.12.2016 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார்.முன்னதாக, கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் மூலம் இரண்டு இலட்சம் ரூபா பெற்றுத் தருவதாக கூறியே புஸ்பலீலா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாகவும், எனினும் 35,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டதோடு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக பின்னர் தான் பணிப் பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அப் பெண்மணி கூறியுள்ளார்.

குறித்த பெண் வெளிநாட்டுக்கு சென்றதன் பின்னர் ஒரு நாள் மாத்திரமே தனது வீட்டாருடன் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

பின்னர் இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் கடந்த பின்பும் வீட்டாருடன் தொலைபேசியில் கதைக்க தொழில் செய்த வீட்டில் இடம் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

தனக்கு வழங்க வேண்டிய மிகுதி தொகையை கேட்டுச் சென்ற இப்பெண்ணின் கணவரை கொழும்பில் தாக்கி இரண்டு நாட்கள் பொலிஸ் நிலையத்திலும் வைத்துள்ளனர்.

இதனால் வருத்தமடைந்த புஸ்பலீலாவின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளார்.

இவ் விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் மூலம் அந்நாட்டுக்கு அறிவித்தும், வேலை செய்த வீட்டு உரிமையாளர் தனக்கு தெரிவிக்கவில்லை என கவலையுடன் தெரிவித்தார் புஸ்பலீலா.

கடந்த 08.12.2016 அன்று கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த போது தான் உறவினர்களால் எனது கணவர் இறந்த செய்தியை கேள்வியுற்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மூன்று பெண் பிள்ளைகளை பெற்று அவர்களை விட்டு இரண்டு வருடங்கள் பிரிந்து இருந்த நிலையில் கணவரும் எங்களை விட்டு பிரிந்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் தாயின் அரவணைப்பில் பிள்ளைகள் வளர்ந்ததாகவும் அவர்களின் உணவு மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தாயார் வீட்டாரும் மாமன் வீட்டாரும் ஏனைய சகபாடிகளும் உதவி செய்ததாக இவர் தெரிவித்தார்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சுபீட்சமடைய செய்யவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் வெளிநாடு சென்ற எனக்கு இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களுமாக கொடுக்க வேண்டிய, ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது ஒரு மாதத்திற்கு அந்நாட்டு நாணயத்தின் படி, 900 ரியால் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி புஸ்பலீலா, இத்தொகையை அந்நாட்டு உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் செலுத்துவதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் எனவும், ஆனால் இன்னும் எனது பணம் வந்து சேரவில்லை எனவும் கவலை தெரிவித்தார்.