ganjaமுல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி, திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று(14) அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்ததில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.இந்தச் சம்பவம் குறித்து சுற்றிவளைப்பு குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் ரத்னநாயக்க தெரிவிக்கையில்,

முல்லைத்தீவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா கடத்தி வருவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது.

அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அவ்வழியாக பயணித்த வேனொன்றை அக்குழு வழிமறித்து சோதனை நடத்தியது.

அந்த வேனில் மூவர் இருந்துள்ளதுடன் வேனிலிருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்கள் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கஞ்சா முல்லைத்தீவில் இருந்து படகொன்றில் கொண்டுவரப்பட்டு நிலாவெளி கடற்கரையில் இறக்கப்பட்டு அங்கிருந்து வேன் ஒன்றில் ஏற்றிவரப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.