இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.
இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இலங்கை தரப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.ஜப்பான் தரப்பில், ரோக்கியோவில் இருந்து வந்திருந்த, உயர்மட்டக் குழுவினருடன், கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.அட்சுகிரோ மொரோரேயும் பங்கேற்றார். இலங்கை- ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் முதல்முறையாக நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.