pandnkattuதென் கடல் பகுதியில் ‘கட்டுவலைத் தொழிலை’ மேற்கொண்டு வரும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு மற்றும் அயல் கிராம மீனவர்களின் கட்டு வலைகளை கடலில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இன்று மன்னார் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பனங்கட்டிக்கொட்டு கிராம மக்கள் இன்றுகாலை 6.15 மணிமுதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரதான பால வீதியில் இன்று காலை 6.15 மணியளவில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 6.15 மணிமுதல் மன்னாரில் இருந்து வெளிமாவட்டத்திற்கு செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டது. அரச பேருந்துகளையும் இடைமறித்து தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.எனினும் உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தங்களுடன் போர்ச்சுவார்த்தை நடத்தி தென் கடல் பகுதியில் உள்ள ‘கட்டுவலைகளை’ அகற்ற மாட்டோம் என உறுதிமொழி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு தொடர்ந்தும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர். இத ன்போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது பனங்கட்டிக்கொட்டு கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கட்டுவலைத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

ஆராம்ப காலத்தில் மன்னார் சௌத்பார் தென்கடல் பகுதியில் இரும்புக் குழாய் மூலம் இவ் வலைகள் பாயப்பட்டிருந்தது. இதனால் அயல் கிராம மீனவர்களின் படகுகளுக்கு சேதம் விளைவிக்கின்றது என்ற கேள்விக்கு அமைவாக இரும்புக்குழாய்கள் மூலம் பாயப்பட்ட வலைகள் இரும்புபைப் இன்றி மிதவை மூலம் பாயப்பட்டு எந்த விதமான பாதிப்புக்களும் இன்றி நாங்கள் கட ற்தொழிலில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையில் தென் கடல் பகுதியில் பாய்ச்சப்பட்டுள்ள கட்டு வலைகள் அனைத்தையும் அகற்றுமாறு கடந்த மாதம் 9 ஆம் திகதி மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த தென் கடல் பகுதியில் உள்ள கட்டு வலைகளை அகற்ற மன்னார் கடற்தொழில் திணை க்கள உதவிப்பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலே நாங்கள் நீதி கோரி வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் காரணமாக கடலில் உள்ள கட்டு வலைகள் அகற்றப்படாது என கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றுமாலை இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தரும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீதிமறியல் கைவிடப்பட்டது. பின் குறித்த கிராம மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவிடம் கையளித்தனர். வீதி மறியல் போராட்டத்தின் காரணமாக காலை 6.30 மணி முதல் 7.40 மணிவரையில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.