கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான்-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா இலங்கை வந்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பிராந்திய நிலைமைகள், பாதுகாப்புக் கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படு த்தவும் ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என்று, ஜப்பானிய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு, கடற்படைக் கப்பல் ஒன்றை வழங்குவதற்கும், இலங்கை படையினருக்கு பயிற்சிகளை அளிக்கவும், ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.