mavai_mp_002மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச செயலகத்தில், புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா, மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில், “எங்களுடைய மக்கள் மாற்றத்தை விரும்பி, ஓர் ஆட்சியை அமைத்திருக்கின்றார்கள். இதேவேளை, தமிழ் பிரதேசங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கின்றார்கள்.

“ஆட்சி மாற்றத்தில் மிகுந்த நம்பிக்கையோடு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அரசியல் தீர்வு கிட்டும், நிர்வாக ரீதியாக சிறந்த நிர்வாகத்தை அரசியல் தலையீடுகளோ அல்லது இராணுவத் தலையீடுகளோ இல்லாமல், மிகச் சிறப்பாக இந்த நிர்வாகம் நடக்கும் என்ற பல நம்பிக்கைகளோடு, மக்கள் இந்த தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள்.

“நாங்கள், தேசிய ரீதியில் நல்லாட்சி அரசாங்கம் என்ற ரீதியில் இணைந்திருந்தாலும், அமைச்சுப் பதவிகளுக்காகப் போராடியவர்கள் அல்லர். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பூநகரி பிரதேசம் கடும் பாதிப்புக்குள்ளான பிரதேசம். வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள், அதிகம் உள்ளனர்.

இந்த மக்களுக்கு இந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் சிறந்த சேவைகளையாற்ற வேண்டும். “மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், தங்களை தாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.