former-ltteவவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென மயக்கமடைந்த பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த முன்னாள் போராளியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதிக்கிரியைகள் குளவிசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று யாழ். நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.