cheddikulamவவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டிருந்தனர். குறித்த பாடசாலையில் 538 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர்.

பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே மாகாண, மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப்புற பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்ளைகளை படிக்கவிடு’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களும் எழுப்பினர்.

இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்டோர்க்கு மகஜர்கள் அனுப்பப்பட்டன.