தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்;தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர். சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவுதினம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் கௌதமன் அவர்களது தலைமையில் 04.01.2017 புதன்கிழமை சுழிபுரத்தில் நடைபெற்றது. இதன்போது சுந்தரம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் சுந்தரம் ஒரு முன்னணித் தோழராக எங்களுடைய தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய மூத்த தோழராக திகழ்ந்திருக்கின்றார். அவருடைய இராணுவ திறமையும், வெளிப்பாடுகளும், அரசியல் ரீதியாக அவருக்கு இருந்த சிந்தனைகளும், தமிழ் மக்களுடைய விடுதலை சம்பந்தமாக அவருக்கு இருந்த தெளிவான ஒரு பார்வையும் தான் அவர் கொல்லப்படுவதற்கு காரணியாக அமைந்தது.
தோழர் சுந்தரம் அவர்கள், புதிய பாதை மூலம் தமிழ் மக்கள் மத்தியிலே ஒரு உணர்வு அலையையும், ஒரு சரியான விழிப்புணர்வையும் உருவாக்கிக் கொண்டிருந்தார. பின்னைய காலங்களில் நாங்கள் அவர் தொடர்பாக கதைக்கின்றபோது ஆதங்கப்பட்டுக் கொள்வோம், சுந்தரம் இருந்திருந்தால் இயக்கம் மிகப் பலம்பொருந்திய இயக்கமாக வளர்ந்திருக்கும் என்று. ஏனென்றால் எமக்கெல்லாம் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உறுதுணையாக இருக்கக்கூடிய அவர் தலைமைக்கு அடுத்த கட்ட நிலையில் இருந்திருக்கின்றார். தொடர்ந்தும் இருந்திருப்பார்.
இதன்மூலம் அவர் தோழர்களை சரியான முறையிலே வழிநடத்தியிருப்பார் என்று பல விதங்களிலே அவருடைய திறமைகளை சிலாகித்துப் பேசுவதுண்டு. ஏனென்றால், அவர் இருந்திருந்திருந்தால் இயக்கம் மிகப் பெரியளவிலே ஒன்றுபட்ட ஒரு இயக்கமாகவும், தமிழ் மக்களுக்கு விடுதலையை நோக்கி பயணிக்கின்ற ஒரு சிறந்த இயக்கமாகவும் உருவாகியிருக்கும். இவைகளே அவர் கொல்லப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாகும்.
அவருடைய இழப்பு இயக்கத்திற்கு மாத்திரமல்ல எமது இனத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் மிக இளமையிலே அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இயக்கங்களெல்லாம் மிக சிறியதாக இருந்த காலகட்டத்திலே அவர் கொல்ப்பட்டார். இருந்தாலும் அவரை இன்றும் ஞாபகம் வைத்திருக்கின்றோம் என்றால் அவருடைய அர்ப்பணிப்பும் அவருக்கு இருந்த அரசியல் ஞானமும் தான். அதுவே அவரை நாங்கள் எல்லோரும் நினைக்க வைக்கின்றது.
அவருடைய கருத்துக்களோடு, அவர் விட்டுச்சென்ற பணியை முன்னெடுத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அவர் என்ன காரணத்திற்காக இயக்கத்தில் இணைந்தாரோ என்ன காரணத்திற்காக அவர் தன்னை அர்ப்பணித்தாரோ அந்தக் காரணத்திற்கு ஒரு சரியா முடிவு காணவேண்டும். அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் முன்னெடுப்பதன்மூலம் விடிவை நோக்கி அந்தப் பாதையிலே சரியாகச் செல்வோம், செல்ல வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன். அஞ்சலி நிகழ்வில் ஆதரவாளர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.