wedrerவேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இராணுவ வாகனம் அதிக வேகமாக சென்ற காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இன்று பிற்பகல் 1.20மணியளவில் இவ்விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 200மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா பிரமண்டு வித்தியலாயத்திற்கு முன்பாக பிறிதொரு விபத்தில் பொலிசார் சென்ற வாகனம் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளகியது. தாதிய உத்தியோகத்தருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.