denkuகிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த முதலாம் திகதியில் இருந்து இன்று (13) வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சியில், மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால் டெங்கு விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் உயிர்கொல்லி டெங்கு நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்திலுள்ள கர்ப்பினிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது.

கடந்த வருடம் வரை டெங்கு நோய் அற்ற மாவட்டமாக கிளிநொச்சி இருந்து வந்தது.

ஆனால் தற்போது 2017 ஆம் வருடத்தின் 13 நாட்களில் கிளிநொச்சியில் 20 இடங்களிலிருந்து 28 பேர் டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, வேகமாக பரவிவரும் டெங்கு காச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனம் கண்டு முற்றாக அழித்தொழிக்குமாறும் சுகாதார பிரிவினர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனர்.