nirmalஅரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.எங்கேனும் ஒரு அறையினுள் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதை விட பொதுமக்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் முக்கியமானது என  நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் தீர்மானமும் அவ்வாறு ஒரு சிலரின் எண்ணக்கருவுக்கு அமையவே எடுக்கப்பட்ட தீர்மானமாக உள்ளதுடன், 5 வருடத்திற்கு ஆட்சியமைக்க வந்த அரசாங்கம் ஒன்று 99 வருடங்களுக்கான தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குடியியல் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மாற்று கொள்கைகளை வெளியிடாமல் விமர்சனங்களை மாத்திரம் தெரிவித்து வருவதாக பிரதமர் ஏற்கனவே குற்றம்சுமத்தியிருந்தார்.

ஆனால் அவ்வாறான மாற்று கொள்கைகளுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் செவிமடுக்காமல் இருப்பதாக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.