vavuniyaவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் இன்றையதினம் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்தின் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு, நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்விலும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் இன்றுகாலை தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்திருந்தது. எனினும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்தினூடாக செல்வதற்கு தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிணங்க தமது பேருந்தை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்தினூடாக செலுத்தியபோது, அங்கு இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால் வழிமறிக்கப்பட்டு தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி, நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இதேவேளை, அங்கிருந்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஊழியர்கள் வீதிக்கு குறுக்காக நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்தின் மீது தனியார் பேருந்தை சேர்ந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் சமரசம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதியொருவர் அக்கரைப்பற்று – யாழ்ப்பாணம் பேருந்தை வேகமாக செலுத்த முற்பட்ட வேளையில், தனியார் பேருந்து சேவையை சேர்ந்தவர்கள் நகராமல் வீதிக்கு குறுக்காக இருந்ததுடன் பேருந்தின் முன்பாகவும் பாய்ந்தனர். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.