இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் முதலீட்டு வலயம் மற்றும், கொழும்பு நிதி நகரத் திட்டம் என்பன தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும், சீன அதிபருடன் இலங்கை பிரதமர் பேச்சு நடத்திய அதேவேளை எதிர்கால முதலீடுகள் தொடர்பாகவும்,சீன அதிபருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக இலங்கை பிரதமர் செயலகத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே டாவோசில் நேற்று ஆரம்பமாகிய உலக பொருளாதார மாநாட்டில் 40 நாடுகளின் 3000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு உலகத் தலைவர்களையும் பிரதமர் ரணில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.