cv vigneswaranஅதிகாரபகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பது பற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண மக்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்க முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகளை செய்து மீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது பற்றி தாம் எடுத்துரைத்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறு தான் பல உதவித் திட்டங்களை வழங்கி வந்துள்ளோம் மீண்டும் இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கும் போது, எந்தவிதமான பயிற்சிகளையும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கவில்லை. மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவம் முன்னாள் போராளிகளையே கைதுசெய்து கொண்டு செல்கின்றனர்.

இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும்.

நடந்த தவறுகளுக்கு நீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களைப் பெற்றுத் தந்தால் மாத்திரமே ஏனைய விடயங்களில் கரிசனை கொள்ள முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர் தடையாக உள்ளனர்.

அதிகாரபகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பது பற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென எடுத்துக் கூறினேன் என்றார்.