ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மலையக இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் மலையகத்தில் மலையக இந்தியவம்சாவளி தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டனர். அவசர சட்டமூலம் ஜல்லிகட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தாலும் அதற்கு மாபெரும் அழுத்தத்தை வழங்கிய மாணவர் படையணியை ஆதரிக்கும் வகையிலும் எவ்வித தடையுமின்றி ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இதேவேளை ஜல்லிக்கட்டு விதித்த தடையினை நீக்குமாறு தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களுக்கு ஆதரவாக நேற்று வல்வெட்டிதுறையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இது இவ்விதமிருக்க கனடா கல்கரி சிட்டி ஹாலில் நேற்றையதினம் மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேராட்டத்தில் பெருந்திரளான தமிழர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.