murderயாழ். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்றுமதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர். இவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தமது அடையாளம் எதுவும் பொலிஸாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் தாலிக்கொடியையும் கொள்ளையர்கள் அபகரித்து தப்பிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டார் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்தே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சாதுரியமாக செயல்பட்டு சந்தேக நபர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.