sfdfdசென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 170 பேரை பொலிசார் கைது செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6நாட்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பொலிசார் வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் 132 இடங்களில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. சென்னை நகர் முழுக்க 51 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 64 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்தன. மேற்கண்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வன்முறையாளர்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வடசென்னையில் 7 வழக்குகள் பதிவானது. வடசென்னையில் பதிவான 7 வழக்குகள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

தென்சென்னை பகுதியில் நடந்த கலவரம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 130 பேர் கைது ஆனதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் நேற்று முன்தினம் நடந்த தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக 170 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.