mangala“காணாமல் போனோர் தொடர்பாக ஓர் அலுவலகத்தை ஆரம்பிக்க சட்டம் உருவாக்கினோம். அதற்கமைய, அந்த அலுவலகத்தை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும். ஆனால், அந்தச் சட்டத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதனைச் செயற்படுத்திய பின்னர், அந்த அலுவலகத்தை திறக்கமுடியும்” என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில், கடந்த யுத்தத்தில் இடம்பெற்றதாககக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளையும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்” என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகச் சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“இந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் இறந்தவர்கள் எவரும், வெளிநாட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள். இரு சாராரும் பெறுமதிமிக்க இலங்கைப் பிரஜைகள். தற்போது தான், நாட்டை முன்னேற்றும் நோக்கில் புதியதோர் ஆட்சியை அமைத்து அந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஜனாதிபதி நல்ல எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றார். கடந்த 2 வருடங்களுக்குள், வடக்குக்கு மட்டும் 11 தடவைகள் வந்திருக்கின்றார். அபிவிருத்தியிலும் நாட்டை முன்னோக்கிச் செல்வதிலும் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

இதனால்தான், இன்று வடக்கு – தெற்கு என்ற பேதமில்லாமல், முழு நாடும் ஜனநாயக அபிவிருத்தி நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றது. காணாமல் போனோர் தொடர்பாக ஓர் அலுவலகத்தை ஆரம்பிக்க சட்டம் உருவாக்கினோம். அதற்கமைய, அந்த அலுவலகத்தை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும். ஆனால், அந்தச் சட்டத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதனைச் செயற்படுத்தியப் பின்னர், அந்த அலுவலகத்தை திறக்கமுடியும். கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் செயற்பாடுகளை, நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அந்த வகையில், வடக்கிலுள்ளவர்களிடம் மட்டுமல்ல தெற்கிலுள்ளவர்களிடமும் இராணுவத்தினரிடமும் சமயத் தலைவர்களிடமும் கேட்டிருக்கின்றோம். அந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியவுள்ளோம்” என்றார்.