xcvcvசயிடம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகருக்கு சென்று பின், கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை சென்றடைந்தனர். இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக் கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் மாணவர்களினால் நடாத்தப்பட்டது. கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் மாறுவேடங்களையும் அணிந்திருந்ததுடன் எதிர்ப்பு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று சயிடம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு யாழிலும் கையெழுத்து வேட்டை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாலபே சயிடம் திருட்டுக் கல்வி கடையை உடனே இரத்து செய் என்னும் கருப்பொருளில் மக்களிடம் யாழ் நகரில் கையெழுத்து பெறும் நிகழ்வு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.