panneerchelvamஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவை தன்னுடன் இணைந்து பணியாற்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தான் நான் ஆட்சி செய்தேன். இனியும் என் பாதை அவர் காட்டிய வழியாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவுக்கு உங்களுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பீர்களா? எனறு கேட்டதற்கு, என்னுடன் இணைந்து மக்கள் பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுப்பேன். தீபாவுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் வீதிவீதியாக சென்று மக்களை தான் நேரில் சந்திக்கப் போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான பி. ஹெச். பாண்டியன், சசிகலா குறித்து தான் நேற்று கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையென செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதலமைச்சராக வி. கே சசிகலா தேர்வானதை பொது மக்கள் ஏற்கவில்லை என ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்தார். எதிர்வரும் 24-ஆம் தேதியன்று மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறிய தீபா, ‘நான் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் ஈடுபடுவேன்’ என்றும் அவர் உறுதியளித்தார்.