Panneerதமிழக சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்கூடாக தெரியும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு எக்காலத்திலும் நான் துரோகம் இழைக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் கூறும் என்று தெரிவித்தார்.மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், எனக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழக சட்டப்பேரவை கூடும் போது தெரிய வரும். அவையில் எனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கூறினார்.

தனது நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜக உள்ளதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், அது உண்மைக்கு மாறான தகவல், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் சென்னை திரும்பியவுடன் நான் அவரை நேரில் சந்திப்பேன் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வம் , சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர்தான் என்றும், கட்சியில் நிரந்தர பொதுச் செயலாளர் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.