kiriyellaமாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதால் மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தினால் கூட மாற்ற முடியாது என அரசாங்கம், நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமையினாலேயே மாணவர்கள்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, நிலையியற் கட்டளையின்கீழ், நாடாளுமன்றத்தில், நேற்றுக் கேள்வி எழுப்பினார். அக்கேள்விக்கு பதிலளிக்கும்போதே, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, மேற்கண்டவாறு பதிலளித்தார். முன்னதாக கேள்வி எழுப்பிய தினேஷ் எம்.பி, “பல்கலைக்கழகத் துறையில் தற்போது பெரும் குழப்ப நிலையொன்று நிலவுகின்றது. விரிவுரைகளை நடத்த முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. நிராயுதபாணிகளாக நின்ற மாணவர்கள்மீது கடந்த வாரம் முழுவதும் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையில், அவற்றை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல, “அப்பாவி போன்று இன்று பேசுகிற இவர்கள், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் எஸ்.பி. திசாநாயக்க உயர்கல்வி அமைச்சராகவும் இருந்தபோது தான் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது. கடந்த ஆட்சியின் போது தான் சைட்டத்துக்கு வைத்தியசாலை அமைக்க 600 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் இடமாகும். இங்கு நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது. விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி நீதிமன்ற தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.