தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். கல்லடி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக ஆரம்பமான எழுக தமிழ் பேரணி, நாவற்குடா மைதானத்தில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெறும் மைதானம் வரை சென்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் ஊர்வலத்தில் ஏந்திச் சென்றிருந்தனர். எழுக தமிழ் மாநாடு நண்பகல் பகல்; 12 மணியளவில் ஆரம்பமானது.