asfdஅவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கென்பரா நகர பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கடந்த காலங்களில் இருந்து இதுவரை பல துறைகளில் மிகவும் நட்புறவுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதாக கூறியுள்ளார். இரண்டு நாடுகளும் எதிராக செயற்படுவது கிரிக்கட் போட்டிகளின் போது மாத்திரமே என்று அவர் கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை மீதுள்ள நட்புறவான ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதவிர இலங்கைப் பிரதமருக்கும் அவுஸ்திரேலியப் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.