tna (4)இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர், துணைசெயலாளர், மற்றும் உயர்ஸ்தானிகரதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.