cvbncvcகிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய போராட்டத்திற்கும், பரவிபாஞ்சான் மக்களின் நிலம் மீட்பு போராட்டத்திற்கும் சந்தை வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுள்ளனர்.

இன்றுகாலை சேவைச் சந்தையின் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு சந்தையிலிருந்து, காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கந்தசுவாமி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்ற வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்களின் காணி, காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. கடந்த அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, அவர்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுக்காத அரசாக இருந்ததன் காரணமாக நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவோம் என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நல்லாட்சி அரசுக்கு வாக்களித்து புதிய அரசை ஏற்படுத்த உதவியிருந்தோம்.

ஆனால் புதிய அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி போன்றே இந்த ஆட்சியும் காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் இந்த அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காது அரசுக்கு ஆதரவுவளித்து வருகின்றனர். இது கவலையளிக்கிறது என சந்தை வர்த்தகச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.