sdffsdsஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்றுக்காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இச் சந்திப்பின்போது, இலங்கையின் அரசியல் விவகாரங்களில் சீனா, மற்றும் இந்தியாவின் ஆர்வம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, இரா.சம்பந்தன், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடு செய்யவில்லை என்றும், அரசியலமைப்பு மறு சீரமைப்பில் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகவும் பதிலளித்தார் என, சந்திப்பில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார். மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கும்போதும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தனர் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sdffsdssdsdss