sdfdssdssமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், இன்றுகாலை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது கறுப்புப் பட்டியணிந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலான, மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு, கருத்து தெரிவித்த பாராளுமுன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.