LTTE partyபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியொன்றினைத் தாம் கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கி வைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில், நேற்று மதியம் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.

கட்சியின் தோற்றம் பற்றிப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தாம் இதனை ஏற்பாடு செய்ததாக, கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “2009ஆம் வருடம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகள் அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டனர். நாங்கள் இழப்பதற்கு எதுவும் வைத்திருக்கவில்லை உயிரைத் தவிர. எமது போராளிகளின் முன்னேற்றத்துக்காகவும் தமிழ் மக்களின் இழந்த அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் இதனை நாம் தோற்றுவித்துள்ளோம். ஒரு வருடகால சிந்தனையின் வடிவம் தற்போது கைகூடியுள்ளது.

புத்திமான்களின் ஆலோசனைக்கு அமைய இதனை நாம் தொடக்கி உள்ளோம். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம். ஆயுதபோராட்டம் என்பதனை எம்மால் இனி நினைத்துப் பார்க்க முடியாது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.