werewrewதமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமென்று கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்பாக முன்னெடுத்து வரும் போராட்டம், 5ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.

கேப்பாப்புலவைச் சேர்ந்த 145 குடும்பங்களும் சூரியபுரத்தைச் சேர்ந்த 46 குடும்பங்களுமே, மக்களுக்குச் சொந்தமான 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த 01ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம், கேப்பாப்புலவு, சூரியபுரம் ஆகிய 528 ஏக்கர் காணிகளை உடைய கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.