Geneva UNபொறுப்புக்கூறல் பொறிமுறையில் இலங்கை அரசு பன்னாட்டு பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஜெனிவாவில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் பன்னாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா குழு இலங்கையிடம் கோரியுள்ளது. சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்ப திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய அளவு தனியார் நிலங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடுகள், பாரிய எண்ணிக்கையான பெண்கள் மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு, 32 இடம்பெயர்ந்தோர் முகாம்ங்கள் தொடர்ந்தும் இயங்குவது என்பன கரிசனைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மீள்குடியமர்வுக்கு இராணுவமயமாக்கல், பாரிய தடையாக இருக்கிறது’ என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.