sdsகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்குமாறு தெரிவித்து பூநகரி மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி பூநகரி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது, அங்கு ஜனாதிபதி, வடக்கு முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகஜரும் பிரதேச செயலர் கிருஸ்ணாந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது. இரணைத்தீவு 1992ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்து இடம்பெயர்ந்த 240 மேற்பட்ட குடும்பங்கள் பூநகரி முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் இரணைமாதா நகரில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் ஒரேயொரு தொழில் கடற்றொழிலாகும். தற்போது இந்த மக்கள் நாள்தோறும் இரணைமாதா நகரிலிருந்து கடற்கரைக்கு சிரமங்களுக்கு மத்தியில் நடந்துசென்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இரணைத்தீவில் உள்ள தேவாலயத்தின் திருவிழாவுக்கு மாத்திரம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மக்கள் தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவை மீட்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையிலேயே இன்று கவனயீர்ப்பு பேரணியை நடத்தியுள்ளனர்.