அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை வயல் பிரதேசத்தில், வாடியொன்றின் கீழ், எரியுட்டப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவரின் சடலம், இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலையடிவேம்பு முருகன் கோவில் வீதியில் வசித்து வந்த 23வயதுடைய சங்கர் விஜிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரென உறவினர்களால் அடையாளம் காட்;டப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேசன் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொத்துவிலுக்கு வேலைக்குச் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் எரியுட்டப்பட்ட நிலையில் சடலமாக வயல் பிரதேசத்தில் இவரின் உடல் கிடப்பதாகத் தாம் அறிந்து கொண்டதாகவும், உறவினர்கள் கூறியுள்ளனர்.சடலத்துக்கு அருகில் இரு கலன்கள் கிடப்பதுடன், அதிலிருந்த பெற்றோலினையே எரியுட்டப் பயன்படுத்தி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், குறித்த இடத்துக்கு விரைந்த, அம்பாறை விசேட தடயவியல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன், அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.