fsdfவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியை, காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 20 வருடங்களாக, வடக்கு – தெற்குக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சவடியாக இது காணப்பட்டது. 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியில் இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழங்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்மையில் குறித்த காணியில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் உடன்பட்டதுடன், வவுனியா அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கொண்ட குழு, காணியை பார்வையிட்டு இராணுவத்திடம் இருந்து பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், குறித்த காணியின் உரிமையாளர்களான 18 குடும்பத்தினரும் தமது காணிகளை பார்வையிடுவதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் இன்று அனுமதி வழங்கப்பட்டது. காணி உரிமையாளர்கள் தமது காணியை 20 வருடங்களுக்கு பின்னர் சென்று பார்வையிட்டதுடன், காணிகளை ஓரளவுக்கு அடையாளப்படுத்தினர்.

இதன்போது, வவுனியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் நில அளவையாளர் ஆகியோர் அங்கு வந்ததுடன் காணிகளை அளவீடு செய்யும் பணியும் இடம்பெற்றது.