mangala (4)நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும்  முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் எமது  திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி  முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சர்வதே நீதிபதிகள் என்பது  இலங்கை தொடர்பான பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை மட்டுமேயாகும். அதனை கட்டாயமாக  ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்  எமக்கில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகரமான தீர்வை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதனை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். நாம் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கே அமெரிக்கா  பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான தேவை எங்களுக்கும் இருக்கிறது. உண்மையை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகவே   காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்து  நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எமது நாட்டின் நீதித்துறை   கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையை இழந்து காணப்பட்டமையே இந்தக் கோரிக்கைக்கான காரணமாகும்.  எமது நீதித்துறை கடந்த காலங்களில் சுயாதீன நிலையை இழந்து இருந்தது. ஆனால் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் சுயாதீன நீதித்துறையை கட்டியெழுப்பியிருக்கிறோம்.

நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும்  முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தைக் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதே நீதிபதிகளை கொண்டுவருவதற்கு எமது தற்போதைய அரசியலமைப்பில் இடமில்லை. எனவே அரசியலமைப்பை மீறி  வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவந்து விசாரணை நடத்த நாம் தயாராக இல்லை.  எனவே  நாங்கள் உள்ளக  நீதிபதிகளைக் கொண்டே  விசாரணைப் பொறிமுறையைக் கொண்டுவருவோம்.

தெற்கு மக்கள் காணாமல் போனபோது  மஹிந்தவுக்கு ஜெனிவா போகமுடியும் என்றால் வடக்கு மக்கள் பற்றி நாம் சிந்திக்கவேண்டியது அவசியம்.

இலங்கையில் ஜோசப் முகாம் என்ற சித்திரவதை முகாம் இருந்ததாக ஜஸ்மீன் சூகா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அவரை நான் இலங்கைக்கு வந்து உண்மை நிலையைப் பார்வையிடுமாறு கூறியிருந்தேன். அதன் பின்னரே சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர்  இலங்கைக்கு அழைத்து  அனைத்து இடங்களையும் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம்.

அதன்படி அவர்  ஜோசப் முகாமிற்கும் சென்று பார்வையிட்டு விட்டு அவ்வாறு  சித்திரவதை முகாம் எதுவும் இல்லையெனக் கூறினார்.  கடந்த காலத்தில்   சித்திரவதை முகாம்கள்  இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை  நாங்கள்   மறுக்கவில்லை.  ஆனால்  தற்போது  சித்திரவதை முகாம் என்று  எதுவும் இல்லை என்பதை   சுட்டிக்காட்டுகிறோம்.  அதனால் தற்போது  ஜஸ்மின் சூகாவிற்கு மீண்டுமொருமுறை  இலங்கை வருமாறு அழைப்புவிடுக்கின்றோம். இலங்கை வந்து உங்களுக்குத் தேவையான அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். சித்திரவதை முகாம்  இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.