yemanகடல் மார்க்கமா சுவீடனை நோக்கி சோமாலியவை சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு மீது ஏமன் கடல் பிராந்தியத்திற்குள் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் சுமார் 31 அகதிகள் பலியாகியுள்ளனர்.

ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா பகுதியை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்தப் போராளிகள் குறித்த கடல் வழியாக ஆயுதங்களை கடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சோமாலியாவை சேர்ந்த 100இற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் தேடி, கடல் வழியாக படகில் சுவீடனிற்கு பயணித்துள்ளனர். அத்தோடு குறித்த அகதிகள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் அளித்திருந்த அடையாளச் சான்றிதழ்களுடன் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள் மீது ஏமன் படையினர் விமானத்தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் 31 பேர் பலியானதாகவும், குண்டு வீச்சினால் சேதமடைந்த படகில் இருந்து, கடலில் குதித்து உயிர் தப்பிய சுமார் 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரசின் துணையுடன், ஏமன் இராணுவம், கடற்படை, விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹோடைடா பகுதியை ஒட்டியுள்ள பாப் அல்-மன்டேப் கடற்பரப்பில் பயணித்த சோமாலிய அகதிகளை ஏமன் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறித்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.