missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் பணி மனையின் முன்னே மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் திடீரென  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்துனுடன் பேசும் வகையிலேயே மாலை 5 மணிக்குப் பின்னர் தபால் நிலைய வீதியில் உள்ள அவரின் வீட்டின் முன்னே திரண்டிருந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு இரவு எட்டரை மணியின் பின்னே வீடு திரும்பியவர் வீட்டின் முன்னே திரண்டிருந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையினை மேற்கொண்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது தங்கள் உறவுகளான வலிந்து காணாமல் போனோரை கண்டு பிடித்துத் தருமாறும், அவர்கள் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அங்கு திரண்டிருந்தவர்க் கேட்டனர். இவர்களின் போராட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது, எனவும், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வலியுறுத்தப் போவதாகவும் சாதகமான பதிலை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் பேச்சசுவார்த்தையில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சு வார்த்தை முடிவடைந்த பின்னர், அவர்கள் பின்னிரவு வேளையில் மீண்டும் ஆளுநர் பணிமனை பகுதியை சென்றடைந்து தமது சுழற்சி முறையிலான உண்ணா விரதத்தினை தொடர்ந்து வருகின்றனர்.