trainரயில் ஓட்டுநர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.

இன்றுகாலை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, ரயில் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இந்திக்க தொடம்கொட கூறியுள்ளார். இக் கலந்துரையாடலின் போது, ரயில் ஓட்டுநர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க நாளை அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார். இதற்கமையவே தமது வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தாம் தீர்மானித்ததாக, இந்திக்க தொடம்கொட சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

மருதானை கோட்டைக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று ரயிலொன்று தடம்புரண்டமையால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரயில் பாதைப் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக, ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.