jaffna universityயாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 18ம் திகதி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின்போது சில மாணவர்களினால் பல்கலைக்கழக கட்டிடத்தின் கண்ணாடிகள் பல அடித்து நொறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வரவேற்பு நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த தடையினை மீறி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை அடுத்து கலைப்பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு மாணவர் ஒன்றியம் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது.

இருப்பினும் இவை தொடர்பில் ஆராய்ந்த துறைசார்ந்த பீடம், சம்பந்தப்பட்ட 13 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், கலைப்பீடத்தின் சகல வகுப்புக்களையும் உடனடியாக ஆரம்பிப்பதாகவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.