சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கை விவகாரங்களில் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை. சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டில் அனுமதித்து கடந்த காலத்தில் மோசமான படிப்பினையை பெற்றுள்ளோம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் சிவில் அமைப்புகளின் பங்களிப்பும் அவசியமானது. மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கும்போதே உண்மைகள் வெளிவரும். இலங்கையின் போர்க்குற்ற விடயங்கள் தொடர்பில் உடலாகம அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டபோதும் அதன் தரம் தொடர்பில் பாரிய கேள்வி எழுந்தது. அவ்வாறன நிலையில் சர்வதேசத்தின் அழுத்தம் இருந்த காரணத்தினால் சர்வதேச கண்காணிப்பு ஒன்றை நாம் ஏற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகவே சர்வதேச கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நாம் குறித்த சில நாடுகளுக்கு தெரிவித்தோம்.
அதன் பின்னர் அவர்கள் உருவாக்கிய விசாரணைக்குழுவே தருஸ்மான் குழுவாகும். தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.