யாழ். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் மாணவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பு விழாவும் நேற்று (15.04.2017) சனிக்கிழமை பிற்பகல் 6.30மணியளவில் றாத்தலடி கலைமகள் கலையரங்கில் கலைமகள் விளையாட்டுக்கழகத் தலைவர் செல்வன் வ.கோகுலநேசன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு. சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் தணிகைவாசன் (தேசிய வைத்தியசாலை, கொழும்பு), திரு. நோபேட் உதயகுமார் (கோட்டக் கல்வி பணிப்பாளர், சங்கானை) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திருநாவுக்கரசு உதயசுரியன் (நிர்வாக உத்தியோகத்தர், வலிமேற்கு பிரதேச செயலகம்) இந்திரா தவநாயகம் (ஆசிரியை. யா.விக்ரோறியாக் கல்லூரி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், நிலைய கீதம், வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றன. தொடர்ந்து கலைமகள் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று பின் செயற்திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில், க.பொ.த.சாதாரணதரம் மற்றும் க.பொ.த உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவ, மாணவியர்க்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்று விசேட கூத்து, பட்டிமன்றம் என்பன இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் பெருந்தொகையான பெற்றோர், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.