kili-meeting-கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினரின் வசமுள்ள பொதுமக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன். சரவணபவன், எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.அத்துடன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படை வசமுள்ள பொதுமக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் விரிவாக இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின் காணி விடுவிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது.
 
தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாகவும்.
இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும் என அவர் நம்புவதாகவும்.

தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்கம் எனவும், காணி விடுவிப்பு தொடர்பில் கிடைக்கப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு தாம் முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்ததாகவும்.

தமக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பாரிய செலவீனம் காணப்படுவதாகவும், அரசாங்கம் அந்த செலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தாம் உடனடியாக அந்த காணிகளை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாகவும்.
மேலும் இரணைமடுவை அண்மித்து கையகப்படுத்தப்பட்டுள்ள 2439 ஏக்கர் நிலப்பரப்பை வெகுவிரைவில் படிபடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் இன்று உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.